Note Details

திராவிட பேரழகி சில்க் ஸ்மிதாவின் கதை

Note Image

“வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக் கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கை படியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திகொள்ள முடியவில்லை”

கவிஞர் மு. மேத்தாவின் இந்த வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகள் தான் சில்க் சிமிதாவின் வாழ்க்கை மர்மங்களுக்கான விடைகள். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா … தமிழை பூர்வீகமாக கொண்ட அவரது இயற்பெயர் விஜயலெட்சுமி… இறக்கும் போது பெயரோடும், புகழோடும் மறைந்து போன சில்க் ஸ்மிதாவின் ஆரம்ப கால கட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானதல்ல… வறுமையின் கோர பிடியில் சிக்கி தவித்தது விஜயலெட்சுமியின் குடும்பம். ஆனாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் விஜயலெட்சுமியிடம் அதிகமாகவே இருந்தது. வறுமையின் தாக்கத்தால் 4ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை விடுத்த விஜயலெட்சுமிக்கு, சினிமா மீதான ஆர்வம் மட்டும் குறைந்த பாடில்லை.

குடும்ப சூழலால் சிறு வயதிலேயே விஜயலெட்சுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கணவன் மற்றும் மாமியாரின் தொந்தரவால் வாடிய விஜயலெட்சுமி வழி தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருந்தார். சினிமாவில் சாதிக்க என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்த விஜயலெட்சுமிக்கு வறுமை தீராத வலியை தந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி வறுமையை சமாளித்து தனது கனவையும் நிறைவேற்றி கொள்வதற்காக சென்னையை தேர்ந்தெடுத்தார் விஜயலெட்சுமி. தனது உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்து கிடைத்த வேலைகளை செய்து கொண்டு, பசியை போக்கி கொண்டே சினிமா வாய்ப்பை எதிர் நோக்கி கொண்டிருந்தார்.

அந்த வேளையில், 1980ம் ஆண்டு வினு சக்கரவர்த்தியின் உதவியால் வண்ணடிச்சக்கரம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது விஜய லெட்சுமிக்கு… சாவித்திரி, சுஜாதா, சரிதா போல நல்ல கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதே விஜயலெட்சுமியின் விருப்பம். ஆனால் முதல் படமே அவருக்கு அப்படி அமைந்து விடவில்லை. வண்டிசக்கரம் படத்தில், சாராயம் விற்கும் பெண் வேடம். படத்தில் விஜய லெட்சுமியின் பெயர் சில்க். ஆனால் கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்தார் விஜயலெட்சுமி…

வண்டி சக்கரம் படத்திற்கு பின்னர் விஜய லெட்சுமியின் வாழ்க்கை பாதையில் மாற்றம் தொடங்கியது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார். ஸ்மிதா என பெயரை மாற்றி கொண்டாலும், முதல் படத்தில் கிடைத்த சில்க் என்ற பெயர் அவரோடு ஒட்டி கொண்டது. கவர்ச்சி நடிகை என்ற பட்டம் கிடைத்தாலும், கொஞ்சமும் கவலை படாமல், அவற்றை தாண்டி தனது பாதையில் முன்னேறி கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா… சொக்க வைக்கும் கண்களும், ஆடவரை கவர்ந்திழுக்கும் உடல் வனப்பு என இந்திய சினிமாவை புரட்டி போட்டார் சில்க் ஸ்மிதா.

“ஏவிஎம் ஸ்டுடியோ முன்னால் நின்று கொண்டிருந்த போது 16, 17 வயது மதிக்கதக்க ஒரு பெண் என்னை கடந்து சென்றாள். அவளது கண்கள் என்னை ஆச்சர்யபடுத்தியது..” சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய நடிகர் வினு சக்ரவர்த்தி வியந்து தெரிவித்த வார்த்தைகள் இவை.

 

புகழின் உச்சியில் இருந்தாலும், அத்தனை நடிகர்களோடு ஆட்டம் போட்டாலும், சினிமா உலகில் அவருக்கான நட்பு வட்டாரம் மிகச்சிறியது. தனக்கான நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ள சில்க் ஸ்மிதா விரும்பியதில்லை. காரணம், கவர்ச்சி நடிகை என்பதால் அவரை பாலியல் ரீதியாக அனுபவிக்கவே துடித்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். அதன் காரணமாகவே தனக்கான நட்பு வட்டாரத்தை சுருக்கியே வைத்திருந்தார். அதுவே தனக்கு பாதுகாப்பு என்றும் எண்ணினார் சில்க் ஸ்மிதா.

இதன் காரணமாகவே சில்க் ஸ்மிதா திமிர் பிடித்தவர் என்ற பெயர் கோடம்பாக்கத்தில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகு எங்கும் பரவலாகத் தொடங்கியது. ஒருமுறை சிவாஜி கணேசன் உடனான படப்பிடிப்பு. சிவாஜிகணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது ஒட்டு மொத்த படக்குழுவும் எழுந்து நின்று மரியாதை செய்தது. எதனை பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா. என்னவொரு ஆணவம் சில்க் ஸ்மிதாவிற்கு என ஒட்டு மொத்த திரையுலகமும் அவரை வசைபாட தொடங்கியது. ஆனால் நான் எழுந்து நின்றால், எனது ஆடை கண்டு சிவாஜிகணேசன் சங்கடப்பட நேரிடும் அதனாலேயே அமர்ந்திருந்தேன் என பதிலளித்தார் சில்க் ஸ்மிதா.

உச்ச நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெற்றாலும், தனது தொழிலுக்கும், சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எப்போதும் நியாயம் செய்ய வேண்டும் என்பதே சில்க் ஸ்மிதாவின் எண்ணம்.

தன்னை கவர்ச்சி கன்னியாக தமிழ் திரையுலகம் காட்டி கொண்டிருந்தாலும், அவருக்குள் இருந்த நடிப்பு திறமை கொண்டாடப்படவில்லை என்பது சில்க் ஸ்மிதாவிற்குள் கடைசி வரை இருந்த வருத்தம். ஆம் சில்க் ஸ்மிதாவின் நடிப்பிற்காக எத்தனையோ படங்களை அடுக்கி கொண்டே சென்றாலும், அலைகள் ஓய்வதில்லை, அன்று பெய்த மழையில் போன்ற படங்கள் சிலக் ஸ்மிதா என்ற நடிகையின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்டங்கள்.

 

இன்னும் நம்ப முடியவில்லை
இதுவும் மரணத்துக்கு நீ கொடுத்த
மாடலாக இருக்கக் கூடாதா?
அணிந்துபார்க்க முடியாமல்…